Friday 19 December 2014

தாய்மையே பெண்மை !!


பெண் என்பவள் சக்தியின் ரூபம் என சொல்லும் உலகில்
பெண்மை பற்றி அறிந்திட
சக்தியவளை தொழுதுநின்றேன்

இமைக்கும் நொடியில் கண்முன் தோன்றினள்
சூலோடு பாசாங்குசம் கைகளில் ஏந்தி
கர்ஜிக்கும் சிம்மவாகினியாக ..
அக்கினி குஞ்சுகளிரெண்டு அவள் கண்கள்
அன்னையென காண்போர்க்கு
அவை அன்பின் பிறப்பிடம்...

அழைத்த காரணம் அறிந்து
அன்போடு குறுநகை புரிந்தாள்
எண்ணியதை அடுக்கடுக்காய் கேட்டுநின்றேன்
‘‘பெண்மையென்பது என்ன தாயே?
பேதங்களறப்பிரித்து சொல்வாய்;
சொல்லுவதை நான் உரக்கச்சொன்னால்
புவிதனில் பெண்மை மலர்ந்திடவேண்டும்;

மின்னலென ஒளிர்ந்த நகைப்புடன்
விழிகளை நோக்கி வினவலைத்திருப்பினாள்
உன்னுள் இருக்கும் உணர்வைப் பற்றி
என்னைக்கேட்டால் யாது சொல்வேன் ?
புரிந்தும் புரியாததிது அம்மா
விரிவுர சொல்லென்றேன்

ஒளிரும் கதிரை விழியில் மலர்த்தி
பென்மையிதுதான் பார் என்றாள்
குளிரும் திங்களை நெற்றியில் கொண்டு
பென்மையிதுதான் பார் என்றாள்;

தகிக்கும் நெருப்பை தொடச் சொன்னாள்
சுட்டது தாயே நெருப்பென்றேன்
அதுதான் பெண்மை என்றுரைத்தாள்;
பனியினில் என்னை நனைய வைத்து
உணர்வினை நன்றாய் உணர்ந்திடச் சொன்னாள்
குளிர்ந்த்தது தாயே மெய்யென்றேன்
பென்மையிது தான் உணரென்றாள்

மலர்ந்து மணக்கும் மலரும் பெண்மை
மலரிடை கொண்ட முள்ளும் பெண்மை
இன்பம் துன்பம் இரண்டுமறிவாய்
இரண்டும் பெண்மை தான் என்றாள்

இத்தனை சொல்லிப் புரியவைத்தாய்
இருப்பினும் ஒன்றாய் சேர்த்துச் சொல்லென்றேன்

குறுநகை கொஞ்சும் முகம் மறைத்து
ஈன்றவள் முகமாய் தோற்றம் காட்டி
"தாய்மைதான் பெண்மை
பெண்மைதான் தாய்மை "
என்றுரைத்து உடன் மறைந்தாள்
தெளிந்தமனதுடன் திசை தொழுதேன் !!


தவ நெறிப் பிரியங்களே போற்றி!!


வாழ்வனைத்தும் தவயோகமாய் மாற்றும்
தவ நெறிப் பிரியங்களே போற்றி!!

புகையென படர்ந்திருக்கும் பொய்மை விலக்கி
உண்மை நிலைகள் உணர்த்தும்
யோக நெறிப் பிரியங்களே போற்றி!!

இலக்கறியாமல் வலியோடுழலும் மனதிற்கு
வலியனைத்தும் வழிகளாய் மாற்றும்
வசந்தப் பிரியங்களே போற்றி!!

ஓம் நமோ பகவதே !!
ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி
பரமே!!


மீண்டும் ஒரு கருவறை வாசம்

ஈரைந்து மாதங்கள்
இருள்சூழ் கருவறை சொர்க்கமாய்

பழி பாவங்கள் ஏதுமற்று
பொய்மை சூழ்ச்சி அறியாமல்
நிம்மதியுறக்கம்கொண்டேனடி

வெளிச்ச பெருவெளி பிறப்பெடுக்க

அன்போடு வஞ்சனைகளும் சேர்ந்தே சூழ
பிரித்தறியத்தெரியா பேதையானேன்

அலைக்கழிந்த மனம் அமைதியுறங்க
மீண்டும்ஒரு கருவறை சேர வரம் தா அம்மா.


நிஜம் தொலையும் முகங்கள்


தமக்கென்று தனித்தனியாய்
வரையறைகள் தாங்கியுள்ளன
இங்குள்ள முகங்களனைத்தும்

அன்பெனும் ஓரிழையில் இவ்வனைத்தையும்
பிணைத்திட சாத்தியமெனினும்
உடன்படுவோர் யாவருமில்லை

அவரவரின் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனை செய்தும் நகர்த்திக் கொண்டிருக்கும்
நீண்டதொரு நாளின் அயர்வுற்ற மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப் பார்க்கிறேன்

வாழ்வின் மேல்
எவ்விதியையும் சுமத்திடாத இயற்கை
அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்கிறது
யாவராலும் வரையப் பட்ட ஓவியங்களை !!


ஸ்ரீயும் நானும்

ஸ்ரீ நேற்றிரவு அலைபேசியில் :அத்தம்மா போன வருசமும் இந்த வருசமும் இன்னைக்கு மீட் பண்ணுது தெரியுமா ?

நான் : என்னடா சொல்லுற கண்ணா .... புரியும் படியா சொல்லு ...
.
ஸ்ரீ : 20.12.2013.... இப்போ மீட் பண்ணிடிச்சா....

நான் :..

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா !!


தம்பி மனைவி (ஸ்ரீயின் அம்மா) பக்கத்தில் இருக்கும் கடையில் போய் ஏதோ சாமான் வங்கி வர சொல்லி இருக்கா ரெண்டு மூணு நாட்களாக...
 
கடைக்காரரும் சில்லறை காசு இல்லாமல் மீதம் தர வேண்டிய ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் சில்லறைக்கு "ஹால்ஸ் " மிட்டாய் தந்து அனுப்பியிருக்கார்...

இன்று காலையில் மீண்டும் ஸ்ரீயை கடைக்கு அனுப்பி இருக்கா அவன் அம்மா... இவன் கடந்த ரெண்டு மூணு நாள் குடுத்த "ஹால்ஸ்" எல்லாத்தையும் கையில் எடுத்துட்டு கடைக்கு போயிருக்கான் ...

கடைகாரர் சாமான்களை குடுத்துவிட்டு தம்பி சில்லறை ஐந்து ரூபாய் இருக்கா என்று கேட்க ... இவனோ இருக்கு என்று ஐந்து ஹால்ஸ் மிட்டாய்களை எடுத்து இந்தாங்க என்று குடுக்க ...
என்ன இது என்று கடைக் காரர் கேட்க .... நீங்களும் சில்லறை இல்லாமல் தானே இந்த மிட்டாய்களை தாறீங்க , என் கிட்டயும் சில்லறை இல்ல அதனால நானும் நீங்க குடுத்த ஹால்ஸ்சயே உங்களுக்கு தாரேன் என்று சொல்ல....
கடைகாரர் உன்ன எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா என்று சொல்ல.... இவனும் உங்கள எப்படி கடவுள் செய்தாங்களோ அதே போல என்னையும் செய்து அனுப்பிருக்காங்க என்று பதில் சொல்லிட்டு வந்துவிட்டான்
ஹஹஹா....


Friday 12 December 2014

அவஸ்தைகளாகும் அதீதங்கள்

விடைகள் தேடி
அலையும் மனதினில்
யாரோ வினா விதைத்துச் சென்றுள்ளனர்.

ஏன் ? ஏன் ? ஏனென
மனக்காடெங்கும் கேள்வி மரங்களாய்
செழித்து கிளைத்து நிற்கின்றது.

தெளியும் மன ஓடையில்
வீசியஎரிகற்களாய்
இப்போதுன் வார்த்தைகள் விழுந்து சலசலக்கிறது

அதீத உனதன்பை எங்கே தவறவிட்டோமென
கனவிலும் உன் நினைவு சுமந்து உறங்குகிறேன்

வலிகள் விழிகளில் கரைதட்டி
அதீதங்கள் அவஸ்தைகளாய் கரைகின்றது

கனக்கும் மனதிற்கும்
வலிகளின் நீட்சிகளுக்கும்
யாதுரைப்பேன்
உன் உள்ளம் நெருங்குதல் சாத்தியமில்லையென..

இதழ்கள் தேடி

நெற்றியில்
நீ பதித்த முத்தம்
மெல்ல ஊர்கிறது
இதழ்கள் தேடி!!

மௌனத்தின் பேரிரைச்சலாய்!!


எழுதப்படாத கவிதைகளெல்லாம்
யாரோ ஒருவரின் குழலிசையாய்
எங்கோ சிந்திய தூரிகையின்ஓவியமாய்
நடனத்தின் அபிநயமாய்
இன்னும் பலவாறாய் இருந்திட
இப்போதென் மௌனத்தின் பேரிரைச்சலாய்!!

புன்னகைப் பூ

பறிக்கத் துடித்த மனம்
திரும்புகிறது
பூக்களின் புன்னகையை ரசித்து !!

மூடிடும் வாழ்க்கைப் புத்தகம்


நாம் தேடிக்கடந்தது ,
தேடலிலிருப்பது,
தேடநினைப்பது ...

வித்தியாசங்களின் விளக்கங்களை
விலையாகக் கொடுத்து
வாங்கிட நினைக்கும்
வாழ்வு எதுவரை?

இகத்தினில் மனிதனின்
இயக்கத்தின் ரகசியம்
உணர்ந்திடும் பொழுதினில்
இயம்பிடும் உண்மைகள்

கிடைத்ததைக் கொண்டு
வாழ்க்கையை முடித்திடும்
அரும் பெரும் பண்பினை
அடைந்திட வாழ்க்கையில்
அனுபவம் என்றொரு
அழகிய நூலினை அறிந்ததும்
அகவைகள் ஆயின பலவே !

துலங்கிடும் பொழுதுகள் யாவும்
பகிர்ந்திடும் செய்திகள் பலவே

நிகழ்ந்திடும் நிகழ்வுகள் அனைத்தும்
நினைத்திடும் வகையில் நிகழ்வதுமில்லை

உருண்டிடும் உலகினை அழகாய்
உருட்டிடும் வித்தகன் யாரோ ?

அனுபவம் என்றொரு நூலை
ஆக்கி முடித்திடும் வேளை
மூடிடும் வாழ்க்கைப் புத்தகம்

Thursday 4 December 2014

தீபத் திருநாள்



நல எண்ணம் சூழ் உலகே
எண்ணெய் நிறை தளும்பும் ஆழியாய்
மெய்யே திரியாய்
வாழும் உயிர்களெல்லாம்
ஒளிரும் சுடராய்
புவியெங்கும் ஒளிர
நானும் ஏற்றுவோம்
நாளும் நாளும் ...
அன்பெனும் சுடரை!!
அகங்கார அரக்கன் அழித்து
அறியாமை இருள்விலக்கி
ஜோதியாய் , ஒற்றுமைத் தீபத்தை
நாமும் ஏற்றுவோம்
எந்நாளும் நன்னாளாய் !!


Tuesday 2 December 2014

தூரிகை சிந்திய எண்ணத் துளிகள்-2



அமைதியின் அழகில் லயிக்கும் மனதிற்கு
ஆர்ப்பாட்டங்கள் அர்த்தமற்றே தெரிகிறது

***************************************************

ஓடும் நதி தனக்கு மட்டுமே சொந்தமென
அதன் கரையோர மரம் நினைத்தல் அர்த்தமற்றது.

‪#‎சில_மனங்களும்_சில_மனிதர்களும்‬

***********************************************

நிதர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாமல்
கண்டும் காணாதுபோல கடந்துவிடுகிறோம்
சுவடில்லாமல்

************************************************

சில நிகழ்வுகளை மறக்கவேண்டும்
என நினைத்துக்கொண்டே
நம்மையறியாமல் நினைவு அடுக்குளின்
மேலெழுப்பி விடுகிறோம்.

****************************************************

உருவம் தேடா உணர்வின் தொகுப்பாய் - மனதுள்
உருண்டோடும் சந்தோஷ சிலிர்ப்புக்கள் தான்
பெயர் கொண்டதா அன்பென்று !!

**********************************************
வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

*****************************************
ஈடுபாடில்லாமல்
செய்ய முற்படும் செயல்களுக்கு
காலத்தை காரணம் காட்டி
தப்பித்துக்கொள்ளவே விழைகிறது மனம்

*******************************************

புறக்கணித்தலைப் போலொரு
கொடிய வன்முறை
வேறொன்றும் இல்லை...
‪#‎அன்பு_செய்வோம்‬

***************************************

வலியில் துடிக்கும்
உயிரின் மதிப்பு
பொருள் தேடலில்…
பொசுங்கிப் போகிறது

**************************************

எதிர்பார்ப்புகளும்,
இயலாமையும்
ஒரே கோட்டில் நிற்கும்பொழுது
வாழ்க்கை கசந்து விடுகின்றது


தூரிகை சிந்திய எண்ணத்துளிகள்



ஆறுதலளிக்கும்
அன்பான சொல்
ஓசையின்றி
சாத்திவிடுகிறது
வெறுமையின்
கதவுகளை.

****************************************************



அளவளாவிய நினைவுகளை
அசை போட்டுக் கடத்துகிறேன்
உன் நினைவு சூழ் காலத்தையும்
வெறுமை சூழ் பயண நேரத்தையும்.

******************************************************

பகிர்தலற்ற பாரங்கள்
மனதை அழுத்தி
உயிர் பருகியே அடங்குகிறது
பல நேரங்களில்

********************************************************

மௌனம் மொழிபெயர்ந்து
கவிதைகளாக ...
சொற்கள் வாதிடுகின்றன
தங்களை ஓவியமாக்கிவிட !!

************************************************************



உண்டு
விழுங்கி
கழிவதென்றாலும்
ஜீரணிக்க சிரமமாய்
மனதில் சில நிகழ்வுகள்

***********************************************************

எதுவும் நிரந்தரமல்ல
எனும் வார்த்தைக்குள் அடங்கிவிடுகிறது
எண்ணிலடங்கா உணர்வுகள்

**************************************************************

சொல்லுபவர்கள் இறைத்துவிடுகின்றனர்
சொற்கள் தான் மென்று அரைபடுகின்றன

***************************************************************

கொள்ளும் கலனிற்கேற்ப
தன்னியல்பு மாறாமல்
உருமாற்றிக்கொள்ளும்
நீரின் குணம் எத்தனை உன்னதமானது !!

***************************************************************

சிலவற்றை

கற்றுக்கொள்வதற்கான விலையென்பது
அதற்காகச் செலவிட்ட

நம் வாழ்வின் ஒரு பகுதியாவே இருக்கிறது

*****************************************************************


கடந்து விட்டதாய் என்னும் சில நாட்களின்
ஏதோவொரு மணித்துளியில்
ஒளிந்திருக்கக்கூடும்
மனதை நிறைக்கும் நினைவொன்று.!!

இளைப்பாறும் மேகங்கள்

மிதந்து களைத்த
மேகக் கூட்டம்
அமர்ந்து இளைப்பாறுகிறது
மலைமுகடுகளில்!!

விரல் கோர்த்திடு


பக்கம் அமர்
தோள் சாய்த்துக்கொள்
தலைகோது
விரல் கோர்த்திடு
முத்தமிட்டுக் கொள்கிறேன்.

முயங்கும் பொழுதொன்றில்...


வேண்டாமென நானும்
வேண்டுமென நீயும்
மதனோற்சவ அரங்கேற்றத்தில் ..
மாறனின் இடைவிடா கணைகளில்
மயங்கி முயங்கிய பொழுதொன்றில்
உன் வேண்டும்களுக்கும்
என் வேண்டாம்களுக்கும்
ஒன்றென பொருளுணர
அரங்கேறியது அங்கோர்
மதனோற்சவம்.


அழியா சுவடுகள்...



எப்படி தேடிடினும் கிடைத்திடா சில சுவடுகள்...

அடைத்திட்ட பூங்காவின் ஊஞ்சலிகளில்
மழலைகள் ஆடிவிட்டு போனதற்கோ

காய்ந்த சருகுகளின் மேல்
சற்றுமுன் ஒரு இலை உதிர்ந்தற்கோ

அடுக்கி கிடக்கும் புத்தகத்தினுள்
மயிலிறகு தேடிய அடையாளமோ

பூட்டிய மாடமாளிகைகளெல்லாம் முன்னெப்போதோ
விசாலமாய் திறக்கப்பட்டிருந்ததற்கோ

எந்த தடங்களும் இருப்பதில்லை
எனினும் அழிக்கவியலாமல் தேங்கி விடுகின்றன
சில நினைவுகள்
சில உணர்வுகள்
சில தேதிகள்...


குட்டி மீராவும்.. பெரிய மீராவும்..

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
தேடிக் களைத்து
உதடுபிதுக்குகையில்
வென்றுவிடுகிறாய்
எனை கண்டுபிடிக்காமலே!!

Monday 1 December 2014

வரமாய் வேண்டுகிறேன்...


அலையாடும் எண்ணங்கள் அமைதியுறங்க
உன்தோள்தனை தேடுகிறேன் சிறுபிள்ளையாய்
சாய்ந்திடும் வரமொன்றை நீஅளித்தால்
ஜென்மசாபங்கள் கரைந்திடும் அந்நொடியே!!

சாரலென விழிமழையும் ஏக்கப்பெருமூச்சோடு வர
உன்மடிகடல்கலந்திட இடம்கொடுத்தால்
என்விழியோடு இமைதழுவி உறக்கம் கொள்வேன்.

அனல்தகிக்கும் பூக்காடாய் மனம் கனன்றிருக்க
பனிபொழிவாய் பார்வைவீசி
வார்த்தைகளால் வான்கிழித்தால்
குளிர்நிலவாய் குடிபெறுவேன்.

படைத்தவன் கொண்ட ஆணையெல்லாம்
அளிப்பவனாய் நீ அவதரித்தால்

ஆசைகொள்ளும் பருவம் கழித்து
அறிவு சொல்லும் சிந்தை கழித்து
எதற்கும் துவளும் மனம் கழித்து
பேதையாவேன் அன்றி பேரிளம்பெண்ணாவேன்!!


Sunday 23 November 2014

தொலையும் அன்பின் அடையாளங்கள்

வலியில் துடிகின்றேன்
உன் வார்த்தை அம்பு தைத்த ரணங்களை வருடியபடி

உனக்கும் வலித்திருக்கும்
என் செயல்களென அறிவேன்

என் வார்த்தைகள் அனைத்த
அலைபேசி யில்
நிரம்பிக்கொண்டிருகிறது
உன் மற்ற செயல்களும்
மருந்தான என் சொற்களும்

மனமிறுக்கும் பிடிவாத முனைப்பால்
மீட்டெடுக்க மறுக்கிறோம்
அலைபேசியையும்
நம் அன்பின் அடையாளங்களையும்...

அன்னை துதி



பிரபஞ்சத்தின் கருனை வடிவான
சத்திய ஒளிப்பிழம்பே போற்றி!!

இருளென சூழ்ந்திடும் மனக்குழப்பம் நீக்கி
தெளிவு தரும் திவ்ய சாநித்யமே போற்றி!!

நல்லோர்கள் வழி நயவஞ்சகர்களை

அடையாளம் காட்டும் அன்னையெனும் திருவே போற்றி!!

வலிமிகுந்த நேரங்களில் வழி இது தானென நெறிபடுத்தும்
நிர்மல தேவி போற்றி!!

ஸ்துல உடல் நீத்து பொன்னொளிப் பிழம்பாய்
"மதர்" என அழைக்கும் மறுநொடி ஏதொ ஒரு வடிவில்
நானிருக்கிறேன் என்று மனஅமைதி தரும்
ஆனந்தக்கடலே போற்றி!! போற்றி!!

ஓம் ஆனந்தமயி!! சைதண்ய மயி!! சத்யமயி பரமே!


மனிதம் தொலைக்கும் மனிதர்கள்

விளையாடி அலுத்து வீசி
பின் மீண்டும் சேகரித்து
வீசி விளையாடி
பலவற்றை தொலைத்தும்
மழலையில் ...

வளரும் நாளிலும்
தொலைந்த விளையாட்டுகளில்
இது மட்டும் தொலைக்காமல்
முதுமை வரை...

பொம்மைகள் இப்போது
மனிதர்களாய் மாறியது ஒன்றை தவிர...


சூனியமான பெருவெளி

விழியிழந்த பாவையாய்
சூழ்ந்து கிடக்கின்றேன்
இருள்வெளியில்

நீளும் கருமையை
எவ்வொளி கொண்டும்
துளைக்கமுடிவவில்லை

உன் ஒற்றை விழி வழி
பார்த்த இப்பெருவெளி
இருள் நிறைந்த சூனியமாகிற்று

தடுமாறும் மனதிற்கு
தட்டுப்படும் உன் குணம்கொண்டு
சொல்லித்தருகிறேன்
மீட்சிப் பாதையின் தீரா வழிதனை

தேடலின் தொலைவிலும்
கைக்கு எட்டா கதவினாலும்
பழகிப்போனது
உண்பதும் உறைவதும்
அடரிருளில்

எங்கெங்கும்
வெளிச்சம் இப்போது
எனைச்சுற்றிய இருளாய்...


வலியா ? மருந்தா ?

வலிமிகுந்த நேரங்களில்
வந்தமர்ந்து விடுகிறாய்
மனதினில்

வலியா ? மருந்தா ? 

நீ யாரென்ற தேடலில்
அசைபோட்டு அனுபவிக்கிறேன்
அவஸ்தையாய்
உன் அதீத அன்பை ...

மழை

நனைந்து விளையாடி
களைத்து நடக்கிறது
குடைகளும்..
கால்களும்
கூடவே
மழைத்துளிகளும்!

மழலை அழகு

விரல் கூட்டி
இதழ் பிரித்து
உண்ண முயல்கையில் 

தவறும் பருக்கைகள்
பரிதவிக்கின்றன 

மோட்சத்திற்கான
வாய்ப்பை இழந்துவிட்டதென !!!

நாட்டிய மழை

அபிநயம் பிடிக்கும் மின்னலுடன்
ஜதி சேர்க்கும் இடிக்கு போட்டியாய்
மத்தளம் இசைகிறது
தகர கூரை மீதுவிழும் மழை

முயற்சி

மூழ்கிவிட்டதென அயராமல்
இன்னொரு கப்பல் செய்கிறார்கள்
அதனினும் திண்மையாய்!!
#மழலைகள்...

அடைமழையாய் ...

நொடிப் பொழுதில் நின்றுவிட்டாலும்
இன்னும் தூரிக்கொண்டே இருக்கிறது
அந்த அழகிய நிமிடங்கள்
நிற்காத அடைமழையென மனமெங்கும் !!


மழையாய் தழுவி....

அவள் மீது
வீழ்வதற்கென்றே
ஆர்ப்பரித்து வருகிறாய்..

அவளின் கூந்தல் நனைத்து
முகம் தழுவி
இடை நழுவி
விழுகிறாய் ...

மழையே
உன்னை போல இன்றேனும்
நானிருக்க வேண்டும்!!

அன்னை துதி



வெற்றிகள் வழி சந்தோஷங்கள் தரும்
சக்தியின் வடிவே போற்றி !!

நிலையான செல்வங்கள் வழி
நிம்மதி தரும் திருவின் வடிவே போற்றி !!

எந்நாளும் அழிவில்லா ஞானத்தில்
தெளிவு தரும் சகலகலா வல்லியே போற்றி !!

தன்னியல்பு நிலை மாறாமல்
தடைகள் அகற்றும் மகேஸ்வரியே போற்றி !!போற்றி!!

அன்னையே நின் பொற்பாத கமலங்கள் பற்றுகிறேன் போற்றி !!
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே..!!



எண்ணச் சிறகுகள்

இலக்குகளற்ற
எண்ணச் சிறகுகளைவிரிக்கிறேன்
பறத்தலுக்காக

இறகுகள் எங்கும்
நினைவுகளின் சுமைகள்

நினைவுகளில் மூழ்கி
நிஜம் தொலைத்திடுவேனோ

ஆயினும்
மனம் மறக்க மறுதலிக்கிறது
நினைவின் தடங்களை...

தெளியும் மனக் குளம்

ஒவ்வொன்றாய் எறிய
கலங்குகிறது மனக்குளம்

வண்டலும் படர்பாசியும்
கிளர்தெழுகிறது

காலம் நகர
ஓரிடத்து பாசை
வேறிடத்தில் படிகிறது
வண்டலும்

கற்கள் விழ கலங்கி
மீண்டும் தெளியும்..

இயல்பாய் காட்டிக்கொள்ள .........

மழையில் நனைந்தும்
இசையில் கரைந்தும்
புத்தகத்தினுள் புதைந்தும்
இதழ்களில் புன்னகைப் பூக்களை மலர்த்தியும்
மனம் மறைத்து
தன்னியல்பாய்
இருத்தலைக் காட்டிக்கொள்ள
வழிகள் ஆராய்ந்த படியே .

மௌன சாட்சி

சிறகொடிந்த பட்டாம்பூச்சி ஒன்று
அனல் தகிக்கும் சாலை நடுவில்
துடித்து உயிர் விடுவதை ..

விரைந்து கடக்கும் ஊர்திகளுக்கு பயந்து
சாலையோரம் மௌன சாட்சியாய் பார்த்த அன்று 

மீசை முறுக்கி சிரித்துக்கொண்டே
கனவில் வந்து போனார் பாரதி

Wednesday 8 October 2014

நாணற்ற நான்



வாழ்வின் முதலும் முடிவுமாய்
என்னைச் சுற்றி சொந்தங்களும் நட்புகளும்
கண்ணீர் சிந்தியபடி ...

என் குடும்பத்தினர் அழவும் திக்கற்று
பித்துப்பிடித்தவர்களாய்
ஆற்றி ஆறுதல் படுத்த நினைக்கிறேன்
ஆயினும் முடியவில்லை
அமைதியாய் கண்மூடியபடி...


கருவில் உதித்து பாதுகாப்பாய் வளர்த்த நாட்கள்
தவழும் போதும் தத்தி நடைபோடும் போதும்
தாங்கி வளர்த்த நாட்கள்

சிறுமியாய் பெற்றவர்கள் கைபிடித்து சுற்றிய நாட்கள்
பட்டாம்பூச்சியாய் விளையாடித் திரிந்த நாட்கள்
விடுமுறைக்காய் ஏங்கி பூர்வீகம் சென்ற நாட்கள்
கல்லூரிக் காலத்தில் விடுதியில் தங்கி
நண்பர்களுடன் கொண்டாடிய நாட்கள்
மனந்தவனோடு, நான் மடிசுமந்தவர்களோடு
கொஞ்சி மகிழ்ந்த நாட்கள்

வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
மனக்கண் முன் பிம்பங்களாய் தோன்றி மறைகின்றது
சில போராட்டங்களையும் சந்தித்து சலித்து போய் நான்
இதோ சிரித்து அழுது லயித்து ரசித்து வாழ்ந்த இல்லத்திலேயே
உயிரற்ற உடலாக...

இன்னும் சற்றுநேரத்தில் இங்கிருந்து பிரிந்து
தனிமை தீயில் நானும் கருகிடுவேன்
இருந்தும் நானின்றி அழுத
இரண்டு வயது தம்பி மகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்
நாம் சாமியாகி விட்டதாய்...


Monday 6 October 2014

மன சாம்ராஜ்யம்



மகிழ்ச்சிப் பூக்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையும் இதுவே
மௌனக்கேவல் வெடித்துச் சிதறும் வெற்றிடமும் இதுவே

நான் மட்டுமே இங்கே ..
மன ஆட்சி நடக்கும் சாம்ராஜ்யத்தின் இளவரசியும் நானே
கடைநிலை பிரஜையும் நானே
எழுதியவையும் எழுதப்படாத வரைமுறைகளும் என் எல்லைக்கு உட்பட்டவையே


சில கனவுச்செடிகளுக்கு கண்ணீர்துளிகளே உரமானது இவ்விடமே
துளிர்விட்ட ஆசைகளின் இளந்தளிர்களை எவரும் அறிந்திடா அழிக்கவியலா ரகசியப் பெட்டகம் இதுவே

பொய்மை மரித்து நிஜம் உயிர்பெறும் நினைவறை
என்னில் நான் புதிதாய் பிறப்பதும் புதுப்பித்துக் கொள்வதும் இவ்விடம் மட்டுமே!!!


துளித்துளியாய் வார்த்தைகள்



சில வேளைகளில் நீ விட்டுச் சென்ற வார்த்தைகள்
என் மனக் கோப்பையை நிரப்பி
குழம்பி புலம்பி வழிகிறது

தித்திப்பாய், கசப்பாய், லயிப்பாய், வியப்பாய்...
கோப்பையை நிரப்பும் தருணங்களில்
என்னில் இருந்து கொஞ்சம் தூரமாய் நிற்கிறேன்


கோப்பையை நிறைத்துகிடக்கும் வார்த்தைகள்
சிந்துகின்றன மழை சிதறல்களாய்
சிரித்தப் படி நனையும் சிறு பிள்ளையென
வந்துவிழும் வார்த்தை துளிகளை
கையில் ஏந்தியபடி நான்

வார்த்தைகள் வற்ற காலியாகி கொண்டிருக்கிறது கோப்பை
சிதறிய வார்த்தைகளும் காலிக் கோப்பையுமாக நான் பெருவெளியை நோக்கியபடி
கையில் மீந்த வார்த்தைகளும் சிதறிக்கொண்டிருக்கிறது இப்போது...!


Monday 29 September 2014

கண்ணா வருவாயா



மண்ணில் தவழ்ந்த வயதிலும்
மங்கை மலர்ந்த பொழுதிலும்
வெண்ணெய்க் குழையும் இதழ்களை
வேதம் பொழியும் விழிகளை
எண்ணி யுருகி அழுகிறேன்.
ஏங்கி மருகிக் கரைகிறேன்.
கண்ணன் கரங்கள் தழுவிடும்
காலம் வரைநான் தரைமீன்.!!

இனிதாய் இனியேனும் !!



நீண்ட காத்திருப்பின் முடிவு
மனதிற்கு இத்தனை இனிதாய் இருக்குமென
அறிந்ததில்லை இதுவரை !!

வெண்பனிக் காலத்தின் குளிரை
முற்றிலும் மறந்த
கத்திரி காலத்தின் வெம்மையில்
புதிதாய் துளிர்த்த இளந்தளிர் சாத்தியமா !!

இருந்தும் இன்றென் சோலையில்
கூதல் காற்றுடன்
மரக்கிளை நிறைத்த இளந்தளிர்களும்

மாற்றங்கள் தொடரட்டும்
இப்படியே இனிமையாய் இனியேனும் !!!



Friday 12 September 2014

ஸ்ரீயின் செல்ல குறும்புகள்


இரண்டாம் வகுப்பு படிக்கும் என் தம்பி மகன் ஸ்ரீ
நேற்று பள்ளியில் பென்சில் பாக்ஸ்சை தொலைத்துவிட்டான். 
அவன் அம்மா (தம்பி மனைவி) அதற்கு அவனை சத்தம் போட்டு 
பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டாமா என்று கேட்டிருக்கிறாள் . 

குறும்புகார ஸ்ரீ அதற்கு தன் அம்மாவிடம் 
" இன்று எது உன்னுடையதோ அது நாளை வேறோருவனுடையது " அப்படின்னு கிருஷணர் கீதையிலேயே சொல்லிருக்காங்க மா.. நேற்று என்னுடைய பாக்ஸ் இன்று வேறு ஒரு பையனுடையது ... நீ ஏன் என்னை திட்டுற... பீ கூல் மா ன்னு கோபமா இருந்த அம்மாவை தன் வசீகர பேச்சால் சிரிக்க வைத்துவிட்டான் ...

துளித்துளியாய் ஒரு கவிதை



துளித் துளியாய் சொட்டிக் கொண்டிருக்கிறது
முற்றத்தின் கீற்றுகளிலும்
மரங்களின் இலைகளிலும் மழை நீர்

பொழிந்ததின் அடையாளம் சற்று நேரத்தில் மறைந்திடலாம்
நீர் சூழ் மேகங்கள் காற்றின் திசைக்கேற்ப கலைந்து
கதிரவனின் ஒளியால் பெருவெளியெங்கும் தகிக்கலாம்

கூடடைந்த பறவைகளும் , மனிதர்களும்
தங்கள் இயல்புக்கு திரும்பலாம்

குட்டையென தேங்கிய கடைசித் துளியும்
நிலத்தின் உஷ்ணம் விழுங்கியதோடு
பெய்தலின் சுவடற்றுப் போகலாம்

ஆனால் சற்றுமுன் இங்கொரு பலத்த மழை பெய்தது
அதன் சாரல் தொட்டு என் உயிர் நனைத்து
உனக்காய் ஒரு கவிதை செய்துகொண்டிருக்கிறேன் !!

நேற்றின் நினைவுகள்


பனிப் படலமாய்
தன்னிருப்பை நினைவூட்டி
காலப் பெருவெளியில் கரைந்தபடி
நிழலாடிக் கொண்டிருக்கிறது
நேற்றின் நினைவுகள்

எதுவென்றறியாத நாளைய பயங்களும்
மனதின் நம்பிக்கைகளும்
ஒன்றாய் பிணைத்து உயிரிழையில் ஊசலாட

இன்றைய நாளோ
அவை துயிலுறங்கி
நேற்றையும் நாளையையும்
சூன்யமாக்கி கல்லெறிய
மனக் குளத்தின் நீர்த்திவலைகளாய்
நினைவுக் கரையான்கள்
மெல்ல முன்னேறி மென்றுக்கொண்டிருக்கிறது


முடிந்திடா உரையாடல்


இன்னும் முடிந்திடா உரையாடலின் முடிவில்
சூழ்ந்திடும் மௌனம் போர்த்தி
உறங்கச்செல்கிறேன்

தலையணையாக மாறிய கைகளில்
உறுத்தும் காதணியாக
என்னை அசைந்து புரள வைக்கிறது
என்னோடு சேர்ந்து உறங்க வந்த உரையாடலின்
நெருடிய சொற்கள்

வரவேற்பறையில் விட்டுவிட்டு வந்த வார்த்தைகளும்
இங்குமங்கும் உலாவிகொண்டிருகின்றன உறங்க மறுத்து
மனதின் சுவர்களில் எதிரொலித்துக்கொண்டே!!!


வாழ்வே மாயை


இளங்காலை சிவப்பாய்

பகற்பொழுதில் வெள்ளியிழைகளாய்

அந்தியில் பொன் மஞ்சள் ஒளிக்கீற்றாய்

இரவினில் அடர்நீலமாக

நித்தம் நம் கண்களுக்கு மாறும் வான்பரப்பு
உணர்த்துகிறதே

இவ்வாழ்வும் அதுபோலொரு மாயையென


விருப்பத்தின் தளிர்கள்


பாறையாய் இறுகி கிடந்தது
பாதியில் வெட்டப்பட்ட அம் மரம்

செழித்துக் கிளைத்திருந்த காலத்தில்
பறவைகளின் சரணாலயமாக இருந்தது

நீர்மையை தேடிப் பரவிய வேர் அறியவில்லை
வெட்டப்பட்ட மரத்தின் வலி

விருப்பத்தின் தளிர்கள்
துளிர்க்கலாம் நாளையோ வேறோரு நாளிலோ

பற்றிக்கொள்ள போதுமானதா அப்பறவைகளுக்கு ???

Thursday 11 September 2014

வாழ்வும் கவிதையும்



எழுதும் ஒவ்வொரு வரியும்
எங்கோ எழுதப்பட்டது போலவே தோன்றுகிறது

எங்கே.... எப்போது.... யாரால் .... என தெரியாத போதும்
எழுதப்பட்டதென உணரமுடிகிறது

வாழ்வும் அப்படியே ....

எப்படி வாழ முயற்சித்தும்
ஏற்கனவே யாரோ....எப்போதோ... வாழ்ந்தவர்களை
பிரதிபலிப்பதாகவே தோன்றுகிறது

அதனால் தானோ
வாழ்வும் கவிதையும் அதனதன் வழியில்
தடையின்றி இயங்கிகொண்டே இருக்கிறது??


எல்லாம் என் கண்ணனுக்கே


காணும் முகம் யாவும் நீயாகவேனும்

வாக்கெல்லாம் உன்னை பாடும் துதியாக வேணும் 

கேட்பதெல்லாம் உந்தன் குழலிசையாக வேணும் 

நீக்கமற நினைவெல்லாம் நீயாக வேணும் -கண்ணா
 
பூக்கும் பாமலரெல்லாம் உன் பதம் சேர வேணும்

உயிர்ப் பூவில் கோர்க்கிறேன்


ஒவ்வொன்றாய்ச் சேர்க்கின்றேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன் -கண்ணா
நீ அறிவாயா ?சூடிக் கொள்ள வருவாயா ?

மலையுரசும் முகில் அழைத்து மழை நீரை சேர்க்கிறேன்
அதிகாலை பனியோடு விழிநீரில் கோர்க்கிறேன்

மொட்டவிழும் மலரெடுத்து உன் முறுவலோடு சேர்க்கிறேன்
சலசலக்கும் நதியொலியில் புன்சிரிப்பை கோர்க்கிறேன்

குழல் வழியும் இசை பிரித்து உன் சுவாசம் சேர்க்கிறேன்
உன்னைத் தொட்ட தென்றலை என் நீள் மூச்சில் கோர்க்கிறேன்

கீழ்வான சிவப்பெடுத்து என் விழிகளுக்குள் சேர்க்கிறேன்
ஊனுருக்கும் ஏக்கத்தை அதிலே கனவாக்கிக் கோர்க்கிறேன்

ஒவ்வொன்றாய்ச் சேர்க்கின்றேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன் -கண்ணா
நீ அறிவாயா ?சூடிக் கொள்ள வருவாயா ?


உன்னுள் உறையும் ஓர்கணம்


உன் மார்பினுள் தொலைந்து
புதிதாய் எனை மீட்டெடுக்கிறேன்

பரந்த உன் தோள்களில்
என் கனவுகளுக்கு
கொஞ்சம் வண்ணம் தீட்டிக்கொள்கிறேன்

தனித்து விழித்திருந்ந இரவுகளை
உன் மடியுறங்கும் பொழுதொன்றில் கடந்துவிடுகிறேன்

இறுகும் உன் அணைப்பில்
சிறு பேதையாகி விடுகிறேன்

என் அணு துளைக்கும் உன் பார்வையில்
பெண்மை மொக்குடைத்து பூத்து காத்திருக்கிறேன்

இதழோடு உயிர்கலக்கும் அக்கணத்தில்
இப்பிறப்பின் வலியனைத்தும் வென்றிடுவேன்.