Wednesday 9 July 2014

கலையும் கனவுகள் .



தெள்ளிய நீர் நிறைந்தோர் அழகிய பொய்கை ! அதில் ஆயிரமாயிரம் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின . மலர்களில் சுரந்த தேனைக் குடித்து , களித்து , ரீங்காரமிட்டபடி வண்டுகள் பறந்தன . அதில் ஒரு கருவண்டு மிதமிஞ்சி தேனைக் குடித்தது , மதிமயங்கி பூவிலேயே கிடந்தது .

காலம் கரைந்து கொண்டிருந்த உணர்வு அந்த வண்டிற்கு இல்லை .

மாலை வந்தது ,இருள் கவிந்தது .மலர்ந்த தாமரையின் இதழ்கள் குவியலாயின ; மயங்கி கிடந்த வண்டு எதையும் அறியவில்லை . அது வெளியில் பறப்பதற்காகத் தாமரை காத்திருக்கவில்லை ; தன் இதழ்களை மூடிக் கொண்டது .

நேரம் கடந்தது . வண்டு விழித்தது .ஆனால் அந்தோ ! இருட்டைத் தவிர வேறு எதையும் அந்த வண்டு காணவில்லை . இதழ் குவிந்த தாமரையில் மாட்டிக்கொண்டதைப் புரிந்துகொள்ள அதற்குச் சற்று நேரம் பிடித்தது . ஆனாலும்

' இந்த இரவு கழிந்து விடும் . கதிரவன் வருவான் .இந்தத் தாமரை மீண்டும் மலரும் . நான் ஆனந்தமாய் வெளியில் பறப்பேன் , பாடித் திரிவேன்!' என்று கனவில் மிதந்தது அந்த கருவண்டு .

ஆனால் நடந்தது வேறு ! தண்ணீர் குடிப்பதற்காகக் குளத்தில் இறங்கியது யானை ஒன்று . மனம் போன போக்கில் தாமரை மலர்களைப் பறித்து வெளியில் ஏறிந்தது . கருவண்டின் கனவுகள் கலைந்தன .

சுகங்களையும் போகங்களையும் நாடி ஓடுகின்றோம் . தடைகள் வருகின்றன , துன்பங்கள் வருகின்றன . உடனே கனவு காண்கிறோம் , சிறந்த எதிர்காலம் ஒன்றின் கனவில் மூழ்குகிறோம் , காலம் பறக்கிறது , கனவுகள் கலைகின்றன ___ மனித வாழ்க்கை பொதுவாக இப்படித்தான் செல்கிறது


8 comments:

  1. உண்மையே...life is a continuos slaughter house. கீதை.

    ReplyDelete
  2. உலகவாழ்வை மலர்- வண்டு கொண்டு விளக்கியது சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  3. உலக வாழ்க்கை - அழகான உவமை :-)

    by Sivakumar Arumugam, FB Follower.

    ReplyDelete