Thursday 11 September 2014

உயிர்ப் பூவில் கோர்க்கிறேன்


ஒவ்வொன்றாய்ச் சேர்க்கின்றேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன் -கண்ணா
நீ அறிவாயா ?சூடிக் கொள்ள வருவாயா ?

மலையுரசும் முகில் அழைத்து மழை நீரை சேர்க்கிறேன்
அதிகாலை பனியோடு விழிநீரில் கோர்க்கிறேன்

மொட்டவிழும் மலரெடுத்து உன் முறுவலோடு சேர்க்கிறேன்
சலசலக்கும் நதியொலியில் புன்சிரிப்பை கோர்க்கிறேன்

குழல் வழியும் இசை பிரித்து உன் சுவாசம் சேர்க்கிறேன்
உன்னைத் தொட்ட தென்றலை என் நீள் மூச்சில் கோர்க்கிறேன்

கீழ்வான சிவப்பெடுத்து என் விழிகளுக்குள் சேர்க்கிறேன்
ஊனுருக்கும் ஏக்கத்தை அதிலே கனவாக்கிக் கோர்க்கிறேன்

ஒவ்வொன்றாய்ச் சேர்க்கின்றேன்
உயிர்ப்பூவில் கோர்க்கின்றேன் -கண்ணா
நீ அறிவாயா ?சூடிக் கொள்ள வருவாயா ?


2 comments:

  1. வணக்கம்
    மாயக்கணண் பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எண்ணத்தில் உள்ளவன் இன்று எழுத்தில் நிறைந்துள்ளான் ... நன்றி ரூபன் சார்

    ReplyDelete