Friday 19 December 2014

நிஜம் தொலையும் முகங்கள்


தமக்கென்று தனித்தனியாய்
வரையறைகள் தாங்கியுள்ளன
இங்குள்ள முகங்களனைத்தும்

அன்பெனும் ஓரிழையில் இவ்வனைத்தையும்
பிணைத்திட சாத்தியமெனினும்
உடன்படுவோர் யாவருமில்லை

அவரவரின் முகங்களின் பெருமை பேசியும்
ஒப்பனை செய்தும் நகர்த்திக் கொண்டிருக்கும்
நீண்டதொரு நாளின் அயர்வுற்ற மாலையில்
அனைத்து முகங்களையும் கிழித்துப் பார்க்கிறேன்

வாழ்வின் மேல்
எவ்விதியையும் சுமத்திடாத இயற்கை
அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்கிறது
யாவராலும் வரையப் பட்ட ஓவியங்களை !!


No comments:

Post a Comment