Tuesday 2 December 2014

தூரிகை சிந்திய எண்ணத்துளிகள்



ஆறுதலளிக்கும்
அன்பான சொல்
ஓசையின்றி
சாத்திவிடுகிறது
வெறுமையின்
கதவுகளை.

****************************************************



அளவளாவிய நினைவுகளை
அசை போட்டுக் கடத்துகிறேன்
உன் நினைவு சூழ் காலத்தையும்
வெறுமை சூழ் பயண நேரத்தையும்.

******************************************************

பகிர்தலற்ற பாரங்கள்
மனதை அழுத்தி
உயிர் பருகியே அடங்குகிறது
பல நேரங்களில்

********************************************************

மௌனம் மொழிபெயர்ந்து
கவிதைகளாக ...
சொற்கள் வாதிடுகின்றன
தங்களை ஓவியமாக்கிவிட !!

************************************************************



உண்டு
விழுங்கி
கழிவதென்றாலும்
ஜீரணிக்க சிரமமாய்
மனதில் சில நிகழ்வுகள்

***********************************************************

எதுவும் நிரந்தரமல்ல
எனும் வார்த்தைக்குள் அடங்கிவிடுகிறது
எண்ணிலடங்கா உணர்வுகள்

**************************************************************

சொல்லுபவர்கள் இறைத்துவிடுகின்றனர்
சொற்கள் தான் மென்று அரைபடுகின்றன

***************************************************************

கொள்ளும் கலனிற்கேற்ப
தன்னியல்பு மாறாமல்
உருமாற்றிக்கொள்ளும்
நீரின் குணம் எத்தனை உன்னதமானது !!

***************************************************************

சிலவற்றை

கற்றுக்கொள்வதற்கான விலையென்பது
அதற்காகச் செலவிட்ட

நம் வாழ்வின் ஒரு பகுதியாவே இருக்கிறது

*****************************************************************


கடந்து விட்டதாய் என்னும் சில நாட்களின்
ஏதோவொரு மணித்துளியில்
ஒளிந்திருக்கக்கூடும்
மனதை நிறைக்கும் நினைவொன்று.!!

No comments:

Post a Comment